திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.71 திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - திருநேரிசை
மனைவிதாய் தந்தை மக்கள்
    மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
    வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
    மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்
    உய்யலாம் நெஞ்சி னீரே.
1
வையனை வைய முண்ட
    மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
    திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
    அம்மநாம் உய்ந்த வாறே.
2
நிருத்தனை நிமலன் றன்னை
    நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
    விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
    உய்ந்தவா நெஞ்சி னீரே.
3
மண்டனை இரந்து கொண்ட
    மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
    தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
    அம்மநாம் உய்ந்த வாறே.
4
நிறைபுனல் அணிந்த சென்னி
    நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
    மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
    காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
    இடும்பைபோய் இன்ப மாமே.
5
வெம்பனைக் கருங்கை யானை
    வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
    காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை
    நாகைக் காரோணங் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
    திண்ணம்நாம் உய்ந்த வாறே.
6
வெங்கடுங் கானத் தேழை
    தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
    கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா
    மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
    பெற்றுநாங் களித்த வாறே.
7
தெற்றினர் புரங்கள் மூன்றுந்
    தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
    சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்
    காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
    பிறந்தவர் பிறந்தி லாரே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
கருமலி கடல்சூழ் நாகைக்
    காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா
    தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
    டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்
    திண்ணம்நாம் உய்ந்த வாறே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.104 திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) - திருவிருத்தம்
வடிவுடை மாமலை மங்கைபங்
    காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு
    கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந்
    துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி
    தென்னைகொல் எம்மிறையே.
1
கற்றார் பயில்கடல் நாகைக்கா
    ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்
    கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
    தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக
    மென்னைகொல் செப்புமினே.
2
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
    வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
    கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா
    யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண்
    டாயெங்கள் சங்கரனே.
3
பழிவழி யோடிய பாவிப்
    பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்
    முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு
    கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்
    அருளெங்கள் வானவனே.
4
செந்துவர் வாய்க்கருங் கண்ணினை
    வெண்ணகைத் தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட
    மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்
    நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா
    திருக்குந் திருமங்கையே.
5
பனைபுரை கைம்மத யானை
    யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா
    ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண்
    குண்டர் மயக்கைநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
    யான்செயும் இச்சைகளே.
6
சீர்மலி செல்வம் பெரிதுடை
    யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு
    கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி
    வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
    மாதிமை யோவுரையே.
7
வங்கம் மலிகடல் நாகைக்கா
    ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
    உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக்
    கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
    யெங்கள் நாயகனே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் மறைந்து போயிற்று.
9
கருந்தடங் கண்ணியுந் தானுங்
    கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்
    சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது
    தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
    செய்திலன் எம்மிறையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com